கரூர்: கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இருந்து, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கரூர் மாவட்டத்தைத் தவிர, அருகில் உள்ள திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்டப்பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் திருமாநிலையூர் என்ற இடத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு ராட்சத குழாய்கள் மூலம் மின்மோட்டார்கள் கொண்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கரூர் மாவட்டத்தின் கடவூர் அருகே உள்ள தரகம்பட்டி - மணப்பாறை சாலை விரிவாக்கப்பணிகள், தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரவு பகலாக நடைபெற்று வரும் பணியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, தரகம்பட்டி கடைவீதி அருகே உள்ள மணப்பாறை சாலையில் குடிநீர் குழாயில் இன்று (ஆக. 30) திடீர் உடைப்பு ஏற்பட்டு, சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் அளவிலான தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக்காண அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கடவூர் வட்டாட்சியர் மூலம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவிரி ஆற்றில் இயக்கப்படும் மின்மோட்டார்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறியது.