கரூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கோவை ரோடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கரூர் காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களைக் காவல் துறையினர் தேடி வந்தனர். இதனிடையே கரூர் பெரியார் வளைவு அருகில் காவல் துறையினர் வாகன தணிக்கையின்போது, சந்தேகத்தின் பேரில் வந்த ரத்தினகுமார், கஸ்பா இருவரையும் காவல் துறையினர் விசாரித்தனர். இதில் ரத்தினகுமார் மீது சந்தேகம் வர போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கருப்பு என்கிற கருப்பசாமி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், பூபதி ஆகியோருடன் இணைந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருப்பசாமி உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 16ஆம் தேதி உயிரிழந்ததும், மோகன்ராஜ் என்பவர் சேலம் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.