கரூர்: கரூர் காவிரி ஆற்றில் நஞ்சை புகலூர் தவிட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆறு நொய்யல் பகுதியில் துவங்கி புகலூர் வாங்கல் வழியாக மாயனூர் கதவணைக்குச் செல்கிறது. அங்கிருந்து அகண்ட காவேரியாக முசிறி, குளித்தலை வழியாகக் கொள்ளிடம், கல்லணை ஆகிய இரண்டு பகுதிகளுக்குச் சென்று, டெல்டா மாவட்டங்களுக்குக் குடிநீர்த் தேவை மற்றும் விவசாய பாசன வசதி பெறுவதற்காகக் காவிரி ஆறு முக்கிய ஆறாக உள்ளது.
மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் 2024-க்குள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டு, ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் கிடைக்கப்படாத கிராமங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றிலிருந்து நஞ்சை புகலூர் கிராமத்தில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியிலிருந்து அரவக்குறிச்சி, திண்டுக்கல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜல் ஜீவன் (Jal Jeevan Mission) குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு செல்வதற்கான முதல் கட்ட பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனம் கடந்த ஒருமாத காலமாகக் கரூர், நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் காவிரி கரையோரம் பணிகளைத் துவக்கியுள்ளனர்.
கிராம சபைக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம்: இப்பணிகள் துவங்கப்பட்ட சில நாட்களில் கரையோரம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகள் நீர்மட்டம் திடீரென வறண்டு போனது இதற்குக் காரணம், திடீரென தோண்டப்பட்ட ராட்சத பள்ளமும், அப்பள்ளத்திலிருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியதே காரணம் என அப்பகுதி பொதுமக்கள் ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கும் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்
குறையும் நிலத்தடி நீர்மட்டம்: இதுதொடர்பாக கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரூபினா தலைமையிலான அரசு அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காவிரி ஆற்றில் துவங்கியுள்ள புதிய குடிநீர் திட்டப் பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகப் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் குடிநீர் கிணறுகள் ஆகியவற்றின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். இது தொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் திட்டப் பணிகளை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.