தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2022, 10:05 PM IST

ETV Bharat / state

நூற்றாண்டு பழமையான கும்பகுழி வடிகால் பாலம் சேதம் - போக்குவரத்து துண்டிப்பு

மாயனூர் கதவணை அடுத்த உபரி நீர் வடிகால் பாலம் உடைந்ததால், அப்பகுதியைச் சுற்றிய கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கும்பகுழி வடிகால் பாலம் சேதம்
கும்பகுழி வடிகால் பாலம் சேதம்

கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரில் இருந்து கட்டளை செல்லும் காவிரிக் கரையில் உள்ள கும்பகுழி வடிகால் பாலம், ஆங்கிலேயர் காலத்தில் 1924ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது கும்பகுழி வடிகால் பாலம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

சிதிலமடைந்து காணப்படும் கும்பகுழி வடிகாலை சீரமைக்கக்கோரி, கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் திடீரென பாலத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகுழி வாய்க்கால் மூலம் வெளியேற்றப்படும் நீர் உடனடியாக நிறுத்தப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மாயனூரில் இருந்து மேலமாயனூர், கட்டளை, ரங்கநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித் தீவுகள் போல் மாறின. மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் ஊரைச் சுற்றி செல்லும் அவலத்திற்குத் தள்ளப்பட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி வடிகால் பாலத்தின் இரு புறங்களிலும், பொதுப்பணித்துறையினர் தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மழை குறைந்து அமராவதி - காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பகுழி வடிகால் பாலம் சேதம் : போக்குவரத்து துண்டிப்பு..

ஆபத்தை உணராமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போட்ட தடுப்பை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தைக் கடந்து செல்கின்றனர். விரைந்து சேதமடைந்த வடிகால் பாலத்தை சீரமைத்து தரக் கோரி விவசாயிகள், அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து: 11 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details