கரூர்: பகல் நேரங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படும் ஆசாத் சாலையில் அமைந்துள்ள கரூர் நகர காவல் நிலையத்தில், விபத்துக்கள் மற்றும் புகார்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கரூர் நகர காவல் நிலையம் இன்று மதியம் 12 மணியளவில் திடீரென மூடப்பட்டது.
கரூர் நகர் பகுதியில் உள்ள, கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து 10 திருநங்கைகளை கரூர் நகர காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் நிலையம் திடீரென மூடப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கரூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பேருந்து பயணிகளிடம் யாசகம் கேட்ட போது, பேருந்து ஓட்டுனர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நள்ளிரவில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, திருநங்கைகளுக்கு சுயமாக தொழில் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இருப்பினும் இரவு நேரங்களில் கரூர் கோவை சாலை, கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை பகுதிகளில் திருநங்கைகள் சிலர் யாசகம் கேட்டு இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பண பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தது.