தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு!

By

Published : Nov 20, 2020, 1:02 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கொலை செய்து பல நாள்களாக வீட்டின் படுக்கையறையில் மறைத்து வைத்திருந்த அழுகிய நிலையிலான உடலை சிவகிரி காவல் துறையினர் மீட்டு தலைமறைவாகியுள்ள கணவனைத் தேடி வருகின்றனர்.

Breaking News


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவர் சின்னபுளியம்பட்டி அரசு ஆரம்பத் தொடக்கப்பள்ளியில் சமையலராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சித்ராவை ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தாண்டாம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திற்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இருவருக்கும் திருமணம் நடந்ததிலிருந்தே கருத்து வேறுபாடு அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கு தனது கணவருடன் மல்லிகா வீட்டுக்கு வந்திருந்த சித்ரா தீபாவளியன்றே தாண்டாம்பாளையத்திற்கு திரும்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி காலை தாயாரை அழைத்த சித்ரா தனது கணவர் இரவு முழுவதும் தன்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததுடன் அடித்துக் காயப்படுத்தியுள்ளதாக வருத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே கடந்த 16ஆம் தேதி காலை மல்லிகா தனது மகளின் கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டபோது பாலசுப்ரமணியம் பேசியுள்ளார். சித்ரா கோவிலுக்குச் சென்றுள்ளதாகவும், வந்தவுடன் கூப்பிடச் சொல்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாக சித்ராவின் கைப்பேசிக்குத் தொடர்புகொண்டும் கிடைக்காததால், சந்தேகமடைந்த மல்லிகா நேற்று (நவ. 19) தனது மகளைப் பார்ப்பதற்காக தாண்டாம்பாளையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது வீடு பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகாமைப் பகுதியினரின் உதவியுடன் பூட்டையுடைத்து வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் அழுகிய நிலையில் சித்ரா இறந்து கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு பேரதிர்ச்சியடைந்த மல்லிகா மயக்கமடைந்தார். இதனைத்தொடர்ந்து அருகாமைப் பகுதியினர் சிவகிரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்ததன்பேரில் விரைந்துவந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தனது மகளை அவரது கணவர் பாலசுப்ரமணியம் கடந்த 16ஆம் தேதியே கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டுத் தப்பித் தலைமறைவாகியுள்ளதாக மல்லிகா வழங்கிய புகாரின்பேரில் பாலசுப்ரமணியத்தை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details