கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய கரூரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சென்று கொண்டிருந்தார். குளித்தலை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே 70 வயது முதியவர் மயங்கி விழுந்ததைக் கண்ட போக்குவரத்து காவலர் அவரை தூக்குவதற்கு முயன்று கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி, போக்குவரத்து காவலருடன் இணைந்து முதியவரை தூக்கிச் சென்று அருகில் இருந்த டீக்கடையில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர் 108ஆம்புலன்ஸ் ஊர்தியை வரவழைத்து முதியவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.