தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த காவல்துறையினரின் ஆய்வுக்கூட்டம் தேர்தல் பிரிவு காவல்துறை தலைமை இயக்குனர் அசுதேஸ் சுக்லா தலைமையில் நடைபெற்றது. அதில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜன், துணை தலைவர் லலிதா லட்சுமி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன், துணை ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 3500க்கும் மேற்பட்ட போலீஸார்! - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம்
கரூர்: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 3500க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் பிரிவு காவல்துறை தலைமை இயக்குனர் அசுதேஸ் சுக்லா தெரிவித்துள்ளார்.
![அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 3500க்கும் மேற்பட்ட போலீஸார்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3160671-260-3160671-1556712490038.jpg)
பின்னர் டிஜிபி அசுதேஸ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அரவக்குறிச்சி தொகுதியில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசார் 1700 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 560 பேர், மத்திய ஆயுதப்படை போலீசார் 240 பேர், ஊர்காவல் படையினர் 500 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 500 பேருக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட 5 காவல் நிலையங்களில் 5 துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவு வரை செயல்பட உள்ளது. தொகுதி முழுவதும் 23 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், தொகுதி முழுவதும் இருபத்தி இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு 124 மண்டல போலீசாரும் பறக்கும்படை குழுவினரும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.