தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2023, 6:49 AM IST

ETV Bharat / state

புலி, சிறுத்தைக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்.. வனத்துறை விளக்கம் என்ன?

பேச்சிப்பாறை அருகே சிற்றார் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் கடந்த 20 நாட்களாக புலியின் அட்டகாசம் ஒருபுறமும், கீரிபாறை அருகே உள்ள அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் சிறுத்தை புகுந்து இரண்டு இடங்களிலும் கன்று குட்டிகள், ஆடுகள், வீடுகளில் வளர்ப்பு நாய்களை புலியும், சிறுத்தையும் மாறி மாறி கடித்து இழுத்துச் செல்வதால் தோட்டத் தொழிலாளர்கள் பீதியில் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி: புலி மற்றும் சிறுத்தைக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்!
கன்னியாகுமரி: புலி மற்றும் சிறுத்தைக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்!

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முழுவதும் அரிக்கொம்பன் யானையால் வனத்துறையினர் பல குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். யானையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை தெரிவித்து வந்தனர், யானையின் வீடியோவையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது கத்தி போய் வால் வந்த கதையாக கடந்த சில தினங்களாக புலி நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் காடுகளில் முகாம் அமைத்து தேடி வருகின்றனர்.

கடந்த 20 தினங்களாக புலி மற்றும் சிறுத்தை நட மாட்டத்தால் வனப் பகுதியில் வாழும் மக்கள் கதி கலங்கி போய் உள்ளனர். பேச்சிப்பாறை அருகே முக்கறைகல், சிற்றாறு, சிலோன் காலனி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் கடந்த சில நாட்களாக புலிகள் அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றி தெரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் புலியை பிடிக்கும் வகையில் ஆட்டு கொட்டகை போன்ற தோற்றம் உடைய கூண்டு ஒன்றை வடிவமைத்து 2 இடங்களில் வைத்துள்ளனர். அந்த கூண்டுக்குள் 2 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் அந்த கூண்டை வனத்துறை கண்காணித்து வருகிறார்கள். புலியை பிடிக்க எலைட் படையினரும், டாக்டர்கள் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில் நெல்லையில் இருந்து வந்த விரைவு படையினரும் புலியை தேடி வருகிறார்கள். பேச்சிப்பாறை மூக்கரைக்கல் பகுதியில் டிரோன் கேமரா மூலமாக புலியை தேடும் பணி 2 நாட்களாக நடந்தது ஆனால் புலி சிக்கவில்லை.

சிற்றாறு பகுதியில் புலி குறித்த அச்சம் அடங்குவதற்குள், கீரிப்பாறை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ரப்பர் தோட்ட தொழிலாளிகள் வசிக்கும் லேபர் காலனியில் ஒரு ரப்பர் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டின் பின்பக்கம் கட்டப்பட்டு இருந்த நாயை சிறுத்தை கடித்து தூக்கி சென்றதை அந்த வீட்டின் உரிமையாளர் பார்த்து உள்ளதாக தெரியவந்தது.

அதற்கு அடுத்த நாள் அதே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை அடித்ததில் ஆடு ஒன்று ஒரு கண் பார்வை இழந்தது. மேலும் கன்று குட்டி ஒன்றையும் சிறுத்தை அடித்துச் சென்றதாக தகவல் பரவியது. அந்த சிறுத்தையுடன் ஒரு குட்டியும் உள்ளதாகவும் இரண்டு வாத்துக்களை பிடித்து சென்றதாக அங்கு வசிப்பவர்கள் கூறியதை அடுத்து வனத்துறையினர் அந்த பகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சிற்றாறு, கீரிபாறை, வனப்பகுதிகளில் குடியிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் சமீப நாட்களாக இரவு வேலைகளில் வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது. பகல் வேளையிலும் கூட தனியாக எங்கும் செல்ல முடியாத அளவிற்கு இந்த பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

மாவட்ட வனத்துறை இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளைப் பிடிக்க கூண்டுகள் வைத்தும், சுமார் 30 கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர். வனத்துறையினர் ஷிப்ட் முறையில் வன பகுதிகளை இரண்டு குழுக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதேபோன்று கீரிப்பாறை பகுதிகளில் சிறுத்தை புலிகளைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக இரவு நேரத்தில் புலிகளை துல்லியமாக படம் பிடிக்க உதவும் தெர்மல் கேமராக்கள் சத்தியமங்கலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனதுறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

புலி மற்றும் சிறுத்தை ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் புகுந்து அட்டாகாசம் செய்து வருவதால் சிற்றாறு மற்றும் கீரிப்பாறை பகுதிகள் மக்கள் பீதி அடைந்து அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.

ஆட்கள் நடமாட்டத்தை குறைத்தால் மட்டுமே புலியை பிடிக்க முடியும் என்று முடிவு செய்தனர். இதனால் தற்போது தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலைட் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். டாக்டர் குழுவினர் மட்டும் கண்காணித்து வருகிறார்கள். தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை சிற்றாறு காலனி பகுதியில் அந்த பகுதி மக்களுடன் வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வன அதிகாரி இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். புலியை பிடிப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், “பேச்சிப்பாறை சிற்றாறு பகுதிகளில் டிரோன் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டது. டிரோன் கேமராவிலும் புலி நடமாட்டம் தென்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்ததை அடுத்து புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆடு, மாடுகளை மட்டும் பொதுமக்கள் பத்திரமாக அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என கூறினார்.

இதையும் படிங்க:ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி - பணத்தை இழந்த பெண்கள் கண்ணீர்மல்க பேச்சு!..

ABOUT THE AUTHOR

...view details