கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே உள்ள நாக்கோடு பகுதியில் வேளாண்மைத் துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் ரப்பர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விவசாயிகள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, ரப்பர் உலர் கூடத்தில் ரப்பர் சீட்டுகள் உலர்த்தி கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், ரப்பர் சீட்டுகள் விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு உலர வைப்பதற்காக கொண்டு வரப்படும் ரப்பர் சீட்டுகளை விவசாயிகள் இங்குள்ள கிடங்கில் இருப்பு வைப்பது வழக்கம். அதன்படி, உலர் கூடத்திலும், அங்குள்ள கிடங்கிலும் சுமார் 75 டன்களுக்கு மேல் ரப்பர் சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று(ஏப்.30) பிற்பகலில் திடீரென ரப்பர் உலர் கூடத்தில் தீப்பிடித்தது. கூடத்தில் உலர வைக்கப்பட்டிருந்த ரப்பர் சீட்டுகளில் தீ பரவி எரியத்தொடங்கியது. அப்போது, அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. தீயை அணைக்க முயன்றபோது, அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளி விக்ரமன் (60) திடீரென மயங்கி விழுந்தார். அவரை சகத் தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்த முடியாததால், அருகில் உள்ள குழித்துறை மற்றும் தக்கலை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிடங்கில் ரப்பர் இருந்த காரணத்தினால் தீ மேலும் எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.