கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதூர்கடை அருகே குன்னம்பாறை பகுதியைச் சேர்ந்தவர், ரேவதி (30). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மே 20ஆம்தேதி தனது வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
அங்கு ரேவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக காணப்பட்டதால், அதற்குரிய சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ரேவதி திடீரென உயிரிழந்தார். ரேவதியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறி, ரேவதியின் சடலத்தை வாங்க மறுப்புத் தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து ரேவதியின் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ரேவதியின் உறவினர் கூறியதாவது, "ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேவதிக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று பாதிப்பில்லை எனக் கண்டறியப்பட்டது. ஆனால், ரேவதியின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சையளித்து வந்தனர்.
அத்தருணத்தில் ஆக்ஸிஜன் குழாயிலிருந்து வெளியேறிய வண்ணம் காணப்பட்டது. இதுகுறித்து ரேவதியின் கணவர் அங்கிருந்த மருத்துவமனை ஊழியரிடம் தெரிவித்தார். ஆனால், இதுகுறித்து அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நீண்ட நேரமாக ஆக்ஸிஜன் தொடர்பான பிரச்னை காணப்பட்டதால், ரேவதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடலை வாங்க மறுப்புத்தெரிவிக்கும் உறவினர்கள் ரேவதி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வரவில்லை. காலதாமதத்துடன் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்த போது, அது பலனளிக்காமல் ரேவதி உயிரிழந்தார். எனவே, ரேவதியின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, அவரது உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்' எனத் தெரிவித்தனர்.