சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி செல்வதற்காக எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கப்படுகின்றன.
சுற்றுலா சீசன் நேரங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் கூடுதல் படகுகள் இயக்க வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் புதிதாக இரண்டு சொகுசு படகுகள் வாங்க சுமார் 8.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரியில் வைத்து அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த படகு கட்டுமான பணிகள் கோவாவில் உள்ள தனியார் படகு கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்த சூழலில் தற்போது ஒரு படகின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து எம்.எல். தாமிரபரணி என்ற பெயரில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகு துறையை வந்தடைந்தது. இதனை கோட்டாட்சியர் மயில் ஆய்வு செய்தார்.