கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் அடுத்துள்ள சமத்துவபுரத்தில் வசித்துவந்தவர் புஷ்பலதா. இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்துவருகிறார்.
இக்குழுவில் உள்ள பெண்களுக்கு தொழில் சம்பந்தமாக அரசின் மானிய உதவியுடன் வங்கியில் கடன் வாங்கி கொடுப்பதும், அதனைத் திரும்ப வங்கியில் கடனை அடைக்க உதவிகள் செய்துவந்தார்.
அந்தவகையில், குழுவில் உள்ள ஜெயராணி என்ற பெண்மணிக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். அவர் உரிய நேரத்தில் அந்தப் பணத்தை கட்டாததால் பணத்தைக் கட்டச்சொல்லி புஷ்பலதா ஜெயராணியை வலியுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராணி, தன்னை வீட்டில் வந்து திட்டியதாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புஷ்பலதா மீது புகார் கொடுத்தார். சுசீந்திரம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அனிதா ஜெயராணிக்கு தெரிந்தவர் எனக் கூறப்படுகிறது.
புகாரைப் பெற்றுக்கொண்ட அனிதா, புஷ்பலதாவை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புஷ்பலதா விஷம் குடித்தார்.
புஷ்பலதாவின் மகன் பத்திரிகையாளர் சந்திப்பு பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவக் கல்லூரியில் உள்ள பிணவறைக்கு கொண்டுசென்றனர்.
இந்நிலையில் புஷ்பலதாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரின் தற்கொலைக்குக் காரணமான அனிதா, ஜெயராணி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை புஷ்பலதாவின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.