தமிழ்நாடு

tamil nadu

'குளத்திற்குள் கிடந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள்' - பொதுமக்கள் அதிர்ச்சி!

By

Published : Jun 24, 2023, 6:04 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பாசனக்குளத்திற்குள் கட்டுக்கட்டாக கிடந்த 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat குளத்திற்குள் கட்டுக் கட்டாக கிடந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
Etv Bharat குளத்திற்குள் கட்டுக் கட்டாக கிடந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

குளத்திற்குள் கட்டுக் கட்டாக கிடந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குளங்கள், கால்வாய்கள் சிறிய மற்றும் பெரிய ஓடைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. குறிப்பாக, விவசாயத்துக்குப் பயன்படும் குளங்களை ஆழப்படுத்தும் நோக்கத்தோடு தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி தூர்வாரப்படும்போது அரிய வகையான பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கோயில் சிலைகள் கிடைப்பது வழக்கம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அடுத்த வேம்பனூர் ஊர் பகுதியில் உள்ள குளத்தில் சினிமாக்கள் மற்றும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் அருகே வேம்பனூர் ஊர் பகுதியில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பாசனக்குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அந்த குளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மோசமான முறையில் புதர் அடைந்து காணப்பட்டதால், பொதுமக்கள் அந்த குளத்தைத் தூர்வாரி சுத்தம் செய்திட அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் அந்த குளத்தினை தூர்வாரும் பணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அந்த குளத்தில் தூர் வாரும் பணி நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குளத்தில் தண்ணீர் வற்றியதை அடுத்து அந்த குளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இன்று (ஜூன் 24) மதியம் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, குளத்தின் கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்ததுள்ளது. அதில், ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைப் பார்த்த அந்த சிறுவர்கள் குளத்தின் கரையில் கிடந்த கவரை எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கவரை பிரித்துப் பார்த்தபோது கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

வங்கியில் இருந்து எடுத்ததற்கான அடையாளங்களும் அதில் இருந்தன. கவரில் இருந்த 2000 ரூபாய் கட்டுகள் முழுமையாக நனையாமல் பாதி அளவு நனைந்த நிலையில் இருந்தது. 20 கட்டுகள் கவரில் இருந்துள்ளன. குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகள் தண்ணீரில் நனைந்து இருந்ததால் சேதம் அடைந்து காணப்பட்டது. பின்னர், அவர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வெயிலில் காய வைத்தனர். குளத்தில் கட்டுக் கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கிய தகவல் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது.

இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆசாரிப்பள்ளம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட பணக் கட்டுகளை ஆய்வு செய்ததில் மொத்தம் 40 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்தப் பணத்தை மீட்டு காவல் துறையினர் விசாரணை செய்த போது, அது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு நோட்டுகள் போல் இருப்பதாகத் தெரிவித்தனர். இருந்தபோதிலும், கைப்பற்றப்பட்ட 2000 ரூபாய் கட்டுகள் எப்படி குளத்துக்குள் வந்தது என்பது குறித்தும் அந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி - வங்கி உதவி மேலாளர் உள்பட 13 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details