தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் காரணமாக உணவின்றி தவித்துவரும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த நீலகண்ட ஜெகதீஷ் என்பவர் அதிமுக கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு இறச்சகுளம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சில நண்பர்களை இணைத்துக் கொண்டு அந்தப் பகுதியில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கி வருகிறார். மேலும் அப்பகுதியில் பணியாற்றுகின்ற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதிய உணவு கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து, ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் அப்பகுதி மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவும் கபசுரக் குடிநீரினை மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு தயாரித்து அதனை சுமார் 7,500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி உள்ளதோடு பக்கத்து கிராமங்களுக்கும் வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.