கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் சூரியன் உதயம் மறையும் நிகழ்வுகளை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இருப்பினும் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகைளையும் இதுவரை செய்யவில்லை.
குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை தேவைகளான கழிப்பறை, குளியலறை, உடை மாற்றும் அறை போன்ற இடங்களில் உரிய வசதிகள் எதுவுமில்லை. மேலும் இந்து சமய அறநிலைதுறைக்குச் சொந்தமான கடற்கரை பகுதியில் செயல்பட்டுவரும் கட்டணக் கழிப்பறை குப்பைகளால் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையிலும் கட்டிடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையிலும் உள்ளது.
இந்த கட்டணக் கழிப்பறையை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் கட்டாய நிலை இருப்பதால் இந்து சமய அறநிலைத் துறை ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் கழிப்பிடம் செல்ல ரூ. 10, குளிப்பதற்கு ரூ. 30, உடை மாற்றுவதற்க்கு ரூ. 20 என கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.