கன்னியாகுமரி: தூத்துக்குடியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் மருத்துவம் 2ஆம் ஆண்டு, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது விடுதியில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், பயிற்சி மாணவர் ஒருவரும், பயிற்சி மாணவி ஒருவரும் தன்னை மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பேராசிரியரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு வழக்கானது நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் விசாரணையைத் தொடங்கினர். அதனை அடுத்து, நீதிமன்ற காவலில் இருந்த பேராசிரியரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்டனர்.