தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வழக்கு: தலைமைறைவான அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைதானது எப்படி? - Former ADMK MLA Arrested

கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவை தனிப்படை காவல் துறையினர் சினிமா பாணியில் காரில் துரத்திச் சென்று கைதுசெய்துள்ளனர்.

சிறுமி பாலியல் வழக்கு :  தலைமைறைவான முன்னாள் எம்எல்ஏ கைதானது எப்படி ?
சிறுமி பாலியல் வழக்கு : தலைமைறைவான முன்னாள் எம்எல்ஏ கைதானது எப்படி ?

By

Published : Jul 30, 2020, 2:42 AM IST

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தங்களது மகள் மாயமானது குறித்து பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் இருவரையும் கண்டுபிடித்து, இளைஞரைக் கைதுசெய்து, அந்தச் சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர் மாவட்ட குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலர்களிடம் மீட்கப்பட்ட சிறுமியை ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது, விசாரணை செய்த அலுவலர்களுக்கு சிறுமி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அந்த வாக்குமூலத்தில், 2017ஆம் ஆண்டு முதல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட சில அதிமுக நிர்வாகிகள் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமி தரப்பில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளிக்கபட்டது. புகாரின் பேரில் விசாரித்த மகளிர் காவல் துறையினர் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தகவலறிந்த நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். தலைமறைவான அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள கோயில் நிர்வாகி ஒருவர் வீட்டில் நாஞ்சில் முருகேசன் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடந்த சில தினங்களாக உவரி பகுதி முழுவதும் முகாமிட்டிருந்த தனிப்படை காவல் துறையினர் மாறுவேடத்தில் சோதனை மேற்கொண்டனர். நாஞ்சில் முருகேசன் நடமாட்டம் குறித்த தகவலை உறுதிசெய்த அவர்கள் இன்று அவர் பதுங்கியிருந்த வீட்டை நெருங்கியுள்ளனர். காவல் துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்த நாஞ்சில் முருகேசன் காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

உடனடியாக தனிப்படை காவல் துறையினர் நான்கு வாகனங்களில் அவரைத் துரத்திச் சென்று, சில நூறு மீட்டர் தூரத்தில் அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர். தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, தனிப்படையினர் நாகர்கோவில் அழைத்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details