கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலில் உருவாகியுள்ள ’டாக்டே’ புயலின் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. நேற்று (மே.14) இரவு பெய்த கனமழையின் காரணமாக கோழிப்போர்விளை பகுதியில் அதிகபட்சமாக 92 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தக்கலை, முள்ளங்கினாவிளை பகுதிகளில் 87 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி அணை பகுதியில் 81.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,532 கன அடி வேகத்தில் நீர் வந்து கொண்டிருக்கிறது. அதிகமான நீர்வரத்தின் காரணமாக விநாடிக்கு 175 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 48 அடியில், தற்போது 43.01 அடி நீர்மட்டம் உள்ளது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 57.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,510 கன அடி வேகத்தில் நீர்வரத்து வருகிறது.