காஞ்சிபுரம்மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 21) நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி இன்றைய தினம் பத்திரிகையாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, மாங்காடு நகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி என மொத்தம் 155 வார்டுககளில் பதிவான வாக்குகள் இரண்டு மையங்களில் எண்ணப்பட உள்ளன.
அதையொட்டி 600 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுவதும் கண்காணிக்கப்படும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 35 வாக்கு எண்ணும் மேசைகளில் அமைக்கப்பட்டு எண்ணப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 16 சுற்றுகள் வரை எண்ணப்படும், மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளில் பதிவான வாக்குகள் ஆறு மேசைகளில் 9 சுற்றும், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் மூன்று மேசைகளில் 9 சுற்றும், வாலாஜாபாத் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் மூன்று மேசைகளில் 6 சுற்றிலும் எண்ணப்படும்.