தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தை மாற்றியமைக்க எம்.எல்.ஏ கோரிக்கை!

கன்னியாகுமரி: நாகர்கோவில் வரும் முதலமைச்சர் பழனிசாமி, தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுக வடிவமைப்பை மாற்றியமைக்க அனுமதி வழங்காவிட்டால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறும் என எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் அறிவித்தார்.

By

Published : Nov 9, 2020, 7:55 AM IST

Updated : Nov 9, 2020, 9:08 AM IST

fishermen
fishermen

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டணம் துறைமுகம், தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நதிக்கரை கழிமுகங்களில் துறைமுக அமைப்பை கைவிட்டுவிட்டன. மணல் அரிப்பும், அதனால் ஏற்படும் தூர்வாருவதற்கான தேவையும் வலுவிழந்துவிட்ட நதி நீரோட்டம் தான் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

கடலை எதிர்கொள்ள அதற்கு இணையான நதி நீரோட்டம் அவசியம் தேவை. அவை இல்லாத சூழலில் கடலை எதிர்கொள்ளும் வலுவான தடுப்புச்சுவர் அமைப்புகள் வேண்டும். தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இவை இரண்டும் குறைபாடுகளாக உள்ளன. துறைமுகம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அப்பகுதி மீனவர்கள், இந்தக் குறைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு அலுவலர்கள் செவிசாய்க்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துறைமுக வடிவமைப்பு சரியாக இல்லாததால், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மீனவர்கள் பலர் படுகாயமடைந்ததோடு, விசைப்படகுகளும் சேதமடைந்துள்ளன.

தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுக வடிவமைப்பை சரிசெய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்கக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் மீனவ அமைப்பினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் தலைமையில் நேற்று (நவ.8) அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், "நாகர்கோவில் வரும் முதலமைச்சர் பழனிசாமி தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை மாற்றியமைக்க அனுமதி அளிக்காவிட்டால் வருகின்ற 11ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பள்ளி மைதானத்தில் விளையாட தடை - போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்கள்

Last Updated : Nov 9, 2020, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details