தமிழ்நாடு

tamil nadu

மீன் பிடி தடைக்காலம் குறைப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி: கரோனா பாதிப்பு காரணமாக மீன் பிடி தடைக்காலம் முடிவடைவதால் ஜூன் 1ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

By

Published : May 29, 2020, 7:00 PM IST

Published : May 29, 2020, 7:00 PM IST

boat
boat

கடல் பகுதிகளில் மீன் வளத்தை பெருக்குவதற்காக ஆண்டு தோறும் ஒவ்வொரு கடற்பகுதிகளிலும் குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை பகுதி, மேற்கு கடற்கரை பகுதி என பிரிக்கப்பட்டு இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் இந்த தடை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதியான திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி கடற்கரை வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள். அதேபோல் மேற்கு கடற்கரைப் பகுதியான குளச்சல் முதல் கேரளா வரை உள்ள மீனவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.

இந்தாண்டு கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலமும் அமலுக்கு வந்தது.

இது போன்ற சூழ்நிலையில் மீனவர்கள் போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர். எனவே மீனவர்களின் நலன் கருதி இந்த வருடம் தடை காலத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று மீன்பிடி தடை காலத்தின் நாட்களைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதிக்குப் பதில் மே 31ஆம் தேதியே முடித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மீன்பிடி தடை காலத்தின் 61 நாள்களில் இருந்து 47 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்லலாம்.

இதனையடுத்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் ஆயத்த பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் மூன்று நாள்களே உள்ளதால் மீன்பிடி வலைகளைச் சீரமைத்தல், விசைப்படகை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நெருங்கியது மீன்பிடி தடைகாலம்: அரசிடம் உதவி கோரும் மீனவர்கள்

ABOUT THE AUTHOR

...view details