கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பாரதிநகர் பகுதியை சேர்வர் ஸ்ரீகண்டன் (41). இவர் தக்கலையில் சொந்தமாக கார் ஒன்று வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக இன்னோவா கார் ஒன்றை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த ஸ்ரீகண்டன் நேற்றிரவு வேலை முடிந்து வீடு திரும்பி அறைக்குச் சென்று கதவைப் பூட்டியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மனைவி சந்தியா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீகண்டன் அண்ணன்கள் பிரபாகரன், மணிகண்டன் ஆகியோரிடம் தகவலளித்துள்ளார். அவர்கள் வீட்டிற்கு வந்து அறை கதவை உடைத்துப் பார்த்தபோது ஸ்ரீகண்டன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருப்பதைக் கண்டனர்.
இதையடுத்து சகோதர்கள் இருவரும் ஸ்ரீகண்டனை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்ட அண்ணன் மணிகண்டன் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையிலேயே மயங்கிவிழுந்தார்.
தொடர்ந்து மணிகண்டனை அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவரும் இறந்தார். மாரடைப்பு காரணமாக மணிகண்டன் இறந்ததாக மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இந்தத் தகவலையறிந்த தக்கலை காவல் துறையினர் இருவரின் உடலையும் உடற்கூராய்வுக்காக அனுப்பினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மணிகண்டனும் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு அஞ்சு என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சகோதர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.