தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 2:43 PM IST

ETV Bharat / state

வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வேல் யாத்திரையை நடத்த அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம்

தமிழ்நாட்டில் நவம்பர் ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் ஆறாம் தேதிவரை திருச்செந்தூர் கோயில் வரையிலாக வேல் யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்தார். வேல் யாத்திரை நடத்தினால் மதக்கலவரம் ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால் வேல் யாத்திரையை நடத்த அனுமதி வழங்கக் கோரி பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி இன்று (நவ.6) சென்னையிலிருந்து பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வேல் யாத்திரையைத் தொடங்கினார். யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், பல்வேறு இடங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே காவல் துறையினர் பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது 10 அடி வேலுடன் 'வெற்றிவேல் வீரவேல்' என்ற முழக்கத்துடன் பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பாஜக மாவட்ட அலுவலகத்தில் இருந்து வேலுடன் ஊர்வலமாக 100 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 அடிக்கு முன்பே காவல் துறையினர் பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் 350க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: தடையை மீறி வேல் யாத்திரை நடந்தால் எதிர்ப்போம்

ABOUT THE AUTHOR

...view details