அதிமுக நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 32ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள எம்ஜிஆர் முழு உருவ சிலைக்கு அரக்கோணம் நாடாளுமன்ற முன்னாள்உறுப்பினர் ஹரி அஞ்சலி செலுத்தினார். அதேபோல திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பி.எம். நரசிம்மன் எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றத்தில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், அம்மா பேரவைத் தலைவர் பக்தவச்சலம், திருக்கழுக்குன்ற ஒன்றிய செயலாளர் கங்காதரன் ஆகியோர் கருங்குழி சாலையில் அமைந்திருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் வெண்கல சிலைக்கு சேலம் மாவட்ட அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அஇதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சக்திவேல் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உதகையில் நகரச் செயலாளர் சண்முகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், அதிமுக செய்தித் தொடர்பாளரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளருமான குறளார் கோபிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.