காஞ்சிபுரம் காவல் துறை நகர ரோந்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் ரவி. இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் சரவணன் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.
நண்பரின் ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காக தனக்கு தெரிந்த நபர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுத் தந்துள்ளார்,ரவி. ரியல் எஸ்டேட் வியாபாரம் மந்தமானதால் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, வாங்கி தந்த 55 லட்ச ரூபாய்க்கு கடந்த ஒரு ஆண்டு காலமாக வட்டி எதுவும் செலுத்தாமல் சரவணன் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
பணத்தை முன்னின்று வாங்கிக் கொடுத்த காரணத்தினால், ரவி மாதம்தோறும் தன்னுடைய சொந்த பணத்தில் வட்டி கொடுத்து வந்துள்ளார். இதனால் பலமுறை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிக்கும் சரவணனுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று சரவணனிடம் பணம் கேட்டு சென்ற இடத்தில், பணம் தர காலதாமதமாகும் எனக் கூறியதால் மனமுடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.