காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஐந்து மாடி கொண்ட மகப்பேறு நல மருத்துவப் பிரிவில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மனைவி முத்தமிழ் (22) என்ற கர்ப்பிணி, பரிசோதனை செய்வதற்காக நேற்று(ஜூலை 19) காலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தனது கணவருடன் வந்திருந்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் முத்தமிழுக்கு உடனே பிரசவம் ஆக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்தது.
இதையடுத்து அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில், சிறுநீர் கழிக்க முத்தமிழ் கழிவறைக்குச் சென்றுள்ளார். தான் இருந்த கட்டிலை விட்டு இறங்கிச் சென்ற கர்ப்பிணியைக் கண்காணிக்க அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் சிறுநீர் கழிக்க முத்தமிழ் அமர்ந்திருந்த நேரத்தில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கேயே பிரசவமான நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தை வெஸ்டர்ன் டாய்லெட்டில் விழுந்தது. செய்வதறியாமல் முத்தமிழ் கத்திக் கூச்சலிட்டதையடுத்து செவிலியர்கள் வந்து குழந்தையை மீட்டனர். பின்னர், குழந்தை மருத்துவ நிபுணர்கள் அங்கு இல்லை எனக் கூறி, குழந்தையை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவெடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாகத் தெரிகிறது.