தமிழ்நாடு

tamil nadu

'ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிகளின் தரத்திற்கு மாவட்ட உணவு வழங்கல் அலுவலரே முழுப் பொறுப்பு' - அமைச்சர் சக்கரபாணி

By

Published : May 3, 2022, 6:48 AM IST

Updated : May 3, 2022, 6:42 PM IST

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாக இருந்தால் முழு பொறுப்பும் மாவட்ட உணவு வழங்கல் அலுவலரே சாரும் என்றும் நியாயவிலைக் கடைகளில் பணிச்சுமையைக் குறைக்க காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான குடோனில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் தரம் குறித்து தமிழ்நாடு உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று (மே.02) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குடோனில் தேக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளிலுள்ள அரிசிகளின் தரம் குறித்து அமைச்சர் சக்கரபாணியே லாரியில் ஏறிச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட உணவு வழங்கல் அலுவலரிடம், குடோனில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி தரமற்றதாக இருந்தால் அதற்கு முழு பொறுப்பும் தாங்கள் தான் என்றும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

அரிசி குடோனில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
பெண்கள் புகார்: இதனையடுத்து கீழ் அம்பியிலுள்ள நியாய விலைக் கடைக்கு சென்ற அமைச்சர் சக்கரபாணி பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்களின் தரம் எடை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் நியாயவிலைக் கடையில் ரேசன் பொருட்கள் வாங்க வந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களிடமும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பெண்மணி ஒருவர் அமைச்சர் சக்கரபாணியிடம், தற்போது வழங்கப்பட்டுள்ள அரிசி மட்டுமே தரமாக உள்ளது என்றும், பலமுறை எங்களுக்கு தரமற்ற அரிசியே வழங்கப்பட்டு வந்ததாக புகார் தெரிவித்தார். அதற்கு அமைச்சர், இனி வருங்காலங்களில் தரமான அரிசி மட்டுமே வழங்கப்படும் என உறுதியளித்தார்.
புதிய குடும்ப அட்டைகள்:பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், "தமிழ்நாட்டில் 6,926 நியாயவிலைக் கடைகள் வாடகைக்கு இயங்கி வருகிறது. அதற்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் 11 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கி சாதனை படைத்துள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்த பணமும் கையூட்டு வாங்கக்கூடாது என்பதற்காக கூலி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை:இருப்பினும் விவசாயிகளிடம் கையூட்டு பெறப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு இதுவரை 27 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டும், இருவர் சிறைக்கு அனுப்பப்பட்டும், இருவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து, இத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வு செய்யும் குழுக்கள்:நியாயவிலை கடைகளில் தரமான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு அரசு உறுதியாக உள்ளது. ஆகையால், குடோனில் இருந்து நியாய விலை கடைக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அதற்கென குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சக்கரபாணி பேட்டி

மாவட்ட உணவு வழங்கல் அலுவலரே பொறுப்பு:குடோனில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி தரமாக இருப்பதற்கு மாவட்ட உணவு வழங்கல் அலுவலருக்கு தான் முழு பொறுப்பு, இனிவரும் காலங்களில் நியாய விலை கடைக்கு அரிசி கொண்டு வருவதற்கு முன்பே குடோனிலேயே அதன் தரத்தை சரி பார்த்து தரமான அரிசி மட்டுமே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வட்டத்திற்குட்பட்ட 10 நியாய விலை கடை விற்பனையாளர்கள் தரமற்ற அரிசி வழங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இது போன்ற தவறு நடக்காது என அவர்கள் உறுதியளித்தன்பேரில், அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. பணிச்சுமை அதிகமாக இருப்பதால் 4,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் முடிவெடுத்துள்ளனர். விரைவில் அதற்கான நடவடிக்கை இத்துறை மூலம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி ஜி.செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள், உணவு மற்றும் வழங்கல்துறை உயர் அலுவலர்கள்,அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ரேசன் அரிசியில் புழு- கிராம மக்கள் போராட்டம்

Last Updated : May 3, 2022, 6:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details