சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் அக்டோபர் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் இரண்டு நாள்கள் தங்கி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்கள். இதனால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முழுவதும் விளக்குகள், பளபளக்கும் சாலைகள், பாதுகாப்பு அதிகரிப்பு, கெடுபிடிகள் என பரபரப்பாக இருக்கிறது மாமல்லபுரம். அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான இரண்டு நாள்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
மாமல்லபுரத்துக்கும் சீனாவிற்கும் வரலாற்றுத் தொடர்பு உள்ளது. அதனை உறுதிசெய்யும் விதமாகவே இந்தச் சந்திப்புக்கு இவ்விடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் அதிகத் தொடர்பு இருந்துள்ளது.
வரலாற்று ரீதியாக புத்த மதத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே நீண்டகாலத் தொடர்பு இருந்துள்ளது. இதற்கான சான்றுகளை மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் காண முடியும். பெளத்தர்களின் தியான நிலைகளை விளக்கும் சிற்பங்கள், பெளத்தர்களின் போதனைகள், கலைகள் ஆகியவற்றை விவரிக்கும் கலைச் சிற்பங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
கி.பி. 5ஆம் நூற்றாண்டின்போது தமிழ்நாட்டில் பல்லவர்கள் ஆண்டபோது, மாமல்லபுரம் (மகாபலிபுரம்) துறைமுக நகரமாக இருந்தது. இங்கிருந்து சீனாவுக்குக் கடல் வழியாக வர்த்தகம் நடந்துள்ளது என்பதை வரலாறு கூறுகிறது. குறிப்பாக பல்லவர்கள், சீனாவுடன் கடல் வாணிபத்தை செய்துவந்தனர்.
பல்லவர்கள் காலத்தில் வாழ்ந்த பெளத்தத் துறவி போதிதர்மன், சீனாவில் முக்கியமான துறவியாக இன்றும் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கிறார். பல்லவர்களின் மூன்றாவது இளவரசரான போதிதர்மன், காஞ்சிபுரத்திலிருந்து மாமல்லபுரம் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கு புத்த மதத்தைப் பரப்பியுள்ளார். இவரின் காலம் கி.பி. 5 முதல் 6ஆம் நூற்றாண்டு வரை எனக்கூறப்படுகிறது.