தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டுப்போன பட்டு பூங்கா திட்டம் புத்துயிர் பெறுமா?: நெசவாளர்கள் எதிர்பார்ப்பு - பட்டுப் பூங்கா திட்டம்

காஞ்சிபுரம்: பட்டுப் பூங்கா விரைவில் செயல்படுவதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெசவாளர்கள்
நெசவாளர்கள்

By

Published : Sep 11, 2020, 5:57 AM IST

மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில், 2009ஆம் ஆண்டு, பட்டு பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 2012ல், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்க்கதிர்பூர் கிராமத்தில், 75 ஏக்கர் அரசு நிலத்தில், 'பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா' என்ற பெயரில், அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.

இதற்கு திட்ட மதிப்பீடான, 83.83 கோடி ரூபாயில், 9 சதவீத தொகையான, 7.54 கோடி ரூபாயை மானியமாக, தமிழ்நாடு அரசு வழங்குவதாகவும், 14 கோடி ரூபாய் மதிப்புடைய, 75 ஏக்கர் அரசு நிலத்தை வழங்குவதாகவும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

மேலும், 'பட்டு சேலைகள் உற்பத்தி செய்வதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 ஆயிரம் பட்டு நெசவாளர்கள் பயன்பெறுவர்' எனவும் தெரிவித்தனர். இந்த திட்டத்திற்கான பணிகள் 2017 ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
அடிக்கல் நாட்டினார்.

ஒருங்கிணைந்த பட்டு பூங்கா அமையவுள்ளது என்பதால், காஞ்சிபுரம் நெசவாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், அறிவிப்பு வெளியாகி, பல ஆண்டுகள் மேலாகியும் இதுவரை பணிகள் துரிதமாக நடைபெறாததால், பட்டு பூங்கா பணிகள் முடங்கியதாக நெசவாளர்கள் கருதுகின்றனர்.

நெசவாளர்களுக்கும், அவர்களை சுற்றியுள்ள உப தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டிய பட்டு பூங்கா பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும், நகரத்தில் பலர் தங்களுடைய கைத்தறி நெசவுத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று வருகிறார்கள். இதனால் கைத்தறி நெசவுத்தொழில் காஞ்சிபுரத்தில் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆய்வு பணிக்காக இன்று (செப்டம்பர் 11) முதலமைச்சர் காஞ்சிபுரம் வரவுள்ள நிலையில், பட்டுப் பூங்கா விரைவில் செயல்படுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details