தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்களை மூடி மின்னல் வேக தலைகீழ் தட்டச்சு; சாதித்த இளைஞர்! - ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு

காஞ்சிபுரம்: மின்னல் வேகத்தில் ஆங்கில எழுத்துகளை இடைவெளியுடன் தலைகீழாக தட்டச்சு செய்து காஞ்சிபுரம் இளைஞர் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று புதியதோர் உலக சாதனையை படைத்துள்ளார். அச்சாதனை இளைஞர் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு...

record
record

By

Published : Dec 22, 2020, 7:54 PM IST

கரோனா ஊரடங்கால் மிகுதியான மக்கள் பேரவலங்களை சந்தித்தாலும், நம்பிக்கை அளிக்கும்படியான சில முயற்சிகளும் நடந்துதான் இருக்கின்றன. காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் முடங்கி இருந்த இளவரசன், எதையாவது புதிதாக செய்ய எண்ணினார். இதற்கு ஊரடங்கும் அவருக்கு கை கொடுத்தது.

சமூக வலைதளங்களில் மூழ்கியிருந்த அவருக்கு, ஆங்கில எழுத்துகளை இடைவெளி விட்டு தலைகீழாக தட்டச்சு செய்யும் முயற்சியில் பலர் ஈடுபட்டு, தோல்வியடைந்தது தெரிந்தது. பலரால் முடியாததை நாம் முயன்று முடித்தால் என்ன? என நினைத்த இளவரசன், சுமார் 5 மாத காலம் வீட்டிலேயே கடும் பயிற்சி மேற்கொண்டார். முயற்சி திருவினையாக்கும் என்ற பழ மொழி இவருக்கு மட்டும் பொருந்தாமல் போய்விடுமா?

ஆங்கில எழுத்துகளை இடைவெளி விட்டு அதுவும் தலைகீழாக, 5.071 நொடிகளில் மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்து சர்வதேச சாதனையை படைத்தார் இளவரசன். இது அனைத்தும் கண்ணை திறந்து அல்ல, துணியால் கண்ணை மூடிக்கொண்டு இச்சாதனையை படைத்துள்ளார் அவர். இதனால் இவருக்கு இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்டு சான்றிதழ் கிடைத்துள்ளது. அதேபோல், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு சான்றிதழ்களையும் அவர் பெற்றுள்ளார்.

கண்களை மூடி மின்னல் வேக தலைகீழ் தட்டச்சு; சாதித்த இளைஞர்!

இளவரசனின் சர்வதேச அளவிலான இச்சாதனையை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், அவரை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள இளவரசன், இளைஞர்கள் அனைவரும், கிடைக்கப்பெறும் காலங்களில் தங்களது திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாதனைகள் பலவிதம். அதிலும் கண்ணிமைக்கும் பொழுதில், கண்ணை கட்டிக்கொண்டு ஆங்கில எழுத்துகளை தலைகீழாக இடைவெளியுடன் தட்டச்சு செய்வதில் இளவரசு உண்மையிலேயெ சாதனை இளவரசுதான்.

இதையும் படிங்க:‘விதை ஒன்று வீழ்ந்திடின், மரம் வந்து சேரும்’ - இயற்கையின் பேரரசன் அமர்நாத் தாஸ்!

ABOUT THE AUTHOR

...view details