காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையையொட்டி பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக, ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமல் ஏரியானது தொடர் கன மழையின் காரணமாக முழுக்கொள்ளளவான 18அடியும் முழுவதுமாக நிரம்பி, ஏரியின் கலங்கள் வழியாக உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இந்த தாமல் ஏரியின் கலங்கள் பகுதியில் ஆர்ப்பரித்துக்கொண்டு வெளியேறி வரும் உபரி நீரையும் பொருட்படுத்தாமல், எவ்வித ஆபத்தையும் உணராமல் சிறுவர்கள், இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆனந்த குளியல் போட்டு குத்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு, தடையை மீறி குளித்து வருபவர்களை அப்புறப்படுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இச்செய்தியின் எதிரொலியாக, இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தாமல் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியிலுள்ள நீர் இருப்பு, வெளியேற்றம் என்பன குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி கூறுகையில், 'வடகிழக்குப் பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.