தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2023, 7:46 PM IST

ETV Bharat / state

அரசு தலைமை மருத்துவமனையில் காணாமல் போன சிறுவன், சிறுமி மீட்பு; கடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு!!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்த பெண்ணின் மகன் மற்றும் மகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் கோழிப்பண்ணை ஒன்றில் போலீசாரால் மீட்கப்பட்டு உள்ளனர்

Etv Bharat
Etv Bharat

காஞ்சிபுரம்: அரசு தலைமை மருத்துவமனையில் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் காமாட்சி என்பவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருடன் கணவர் மூர்த்தி, நான்கு வயது மகன் சக்திவேல், உறவினர் குள்ளம்மாள், அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோரும் வந்து தங்கியிருந்தனர்.

அன்று மாலை முதல் சக்திவேல் மற்றும் செளந்தர்யா ஆகிய இருவரும் காணாமல் போய்விட்டனர். அடையாளம் தெரியாத ஒரு பெண் இவர்களுடன் பேச்சு கொடுத்து கடத்தியதாக செய்திகள் வெளியாகின. குழந்தைகள் காணாமல் போனது குறித்து காவல் துறையில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் வெற்றிச் செல்வன், மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்து மூர்த்தி, காமாட்சி, குள்ளம்மாள் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகர் குழந்தைகளை கண்டுபிடிக்க பத்து தனிப்படைகள் அமைத்து தேடுதலை தீவிரமாக்கினார்.
போலீசார் மகப்பேறு மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். போலீசாரின் ஆய்வு மற்றும் விசாரணையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெண் ஒருவர் பல வீதிகளில் சுற்றிச் சென்றது தெரியவந்தது.

தீவிர புலனாய்வில் குழந்தைகள் வாலாஜாபாத் தாலுக்கா அஞ்சூர் அருகே உள்ள கோழிப் பண்ணையில் இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அங்கு விரைந்து போலீசார் இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த கடத்தல் சம்பந்தமாக வெங்கடேசன் என்பவரைக் கைது செய்து விசாரித்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள பெண்ணைத் தேடி வருகின்றனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி கூறும் போது, ”குழந்தைகள் காணாமல் போனதாக புகார் வந்தவுடன் மாவட்ட காவல்துறை மொத்தமாக முடுக்கி விடப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

போலீசாரின் சிறப்பான புலனாய்வு மற்றும் பொதுமக்கள் உதவியின் காரணமாக குழந்தைகளை பத்திரமாக மீட்க முடிந்தது. விரைந்து செயல்பட்டு குழந்தைகளை மீட்ட அனைத்து போலீசாருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளை எதற்காக கடத்தினார்கள் என்பது குறித்து தற்போது விசாரித்து வருகிறோம். பொது இடங்களில் குழந்தைகளை நம்முடைய நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களிடம் பழக விடக்கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: விவசாயி புகாருக்கு சிரித்த மின்வாரிய அதிகாரி: "ஏன் சிரிக்கிறீங்க?" - கோபப்பட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details