விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, கல்வராயன் மலையில் அமைந்துள்ள சுயமரியாதைச் சுடரொளி தந்தை பெரியார் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தந்தை பெரியார் அவர்களின் பெயர் மீது சில விஷமிகள் காவி வண்ணத்தை பூசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் சில நாட்களாக, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை கருத்து ரீதியாகவோ, தத்துவங்கள் ரீதீயாகவோ எதிர்கொள்ள முடியாத கயவர்கள், யாருமற்ற நேரங்களில் காவி வண்ணத்தைத் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் அல்லது பெயர்ப்பலகையின் மீது பூசி தங்களது கோழைத்தனத்தை வெளிக்காட்டுகின்றனர்.