கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டுவருகிறார். அப்போது, களமருதூர் கடைவீதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் யார் பலன் அடைந்தார்கள், என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்துக் கொடுக்கப்படும். பொதுமக்களின் நலன்கருதி களமருதூரில் காவல் நிலையம் அமைக்கப்படும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், தற்போது இரண்டு அடிமைகள் ஆட்சியில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்துவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு, கல்விக்கடன் ஆகியவை ரத்துசெய்யப்படும்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். பெண்களைக் கடத்திச் சென்று ஆபாசமாக காணொலி எடுத்து அவர்களை மிரட்டினார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதில் அதிமுக நிர்வாகி அருளானந்தம் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
இது சம்பந்தமாக முதலமைச்சரிடம் கேட்டபோது, அந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உழைத்து படிப்படியாக முன்னுக்கு வந்ததாக கூறுகிறார். அவர் எப்படி வந்தார் என்று எல்லாருக்கும் தெரியும். சசிகலாவின் காலைப்பிடித்துதான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர பதவிக்கு வந்தார்.