தமிழ்நாடு

tamil nadu

பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

By

Published : Nov 15, 2020, 1:31 PM IST

கள்ளக்குறிச்சி: கொங்கராபாளையம் கிராமத்தில் பட்டாசுக்கடை வெடி விபத்தில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Crackers shop accident
Crackers shop accident

கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கராபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், இளங்கோ மகன் கிருஷ்ணசாமி(34). அரிசிக் கடை நடத்திவருகிறார். தீபாவளிக்காக கடை அருகே பட்டாசுகளை விற்பனைக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (நவ-14) கிருஷ்ணசாமி மகன் தர்ஷித் (1 1/2), பக்கத்து வீட்டுக்காரர் பழனிவேல் மகள்கள் நிவேதா(7), வர்ஷா(6) ஆகிய மூவரும் கடைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், அந்த தெருவில் பட்டாசு வெடித்ததில் தீப்பொறி எதிர்பாராதவிதமாகப் பட்டாசுக் கடையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதில் கடையிலிருந்த பட்டாசு முழுவதும் வெடித்துச் சிதறியதில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிவேதாவும், வர்ஷாவும் சேலம் மருத்துவமனைக்கும், தர்ஷித் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து தர்ஷித் மேல் சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த தர்ஷித் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். நிவேதா, வர்ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வரஞ்சரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details