கள்ளக்குறிச்சி:அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌரி-லோகநாதன் தம்பதி. கடந்த 7ஆம் தேதி இவர்களது 4 வயது மகன் வழக்கம்போல் வீட்டில் தாய், தந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு கௌரி எழுந்து பார்த்தபோது சிறுவன் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கச்சிராயபாளையம் காவல் துறையினர் சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகளிலும், அருகிலுள்ள நீர்நிலைகளான விவசாயக்கிணறுகள் மற்றும் கோமுகி ஆற்றின் கரைப்பகுதிகளிலும் குப்பைக்கூடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கச்சிராபாளையம் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுவனைப் பற்றிய முழுமையான துப்பு கிடைக்காததால் உயர் அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வகுமாரின் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, திருமேனி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கச்சிராயபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலமும் கோமுகி ஆறு உள்ளிட்ட நீர்நிலைப்பகுதிகளிலும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்களை வைத்து அவற்றுள் பகிரப்படும் தகவல்களையும் தீவிரமாக கண்காணித்து சிறுவனைத்தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பங்காரம் என்ற பகுதியில் இருந்து ஒரு தொலைபேசியில் இருந்து தாயாருக்கு அழைப்பு வந்தது.