கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாண்டியன் (43). திருமணம் ஆகாதவர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது நண்பரை பார்க்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பாண்டியனின் சகோதரர் குமார் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டியனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாண்டியனின் நெருங்கிய நண்பரான அதே ஊரைச்சேர்ந்த வேல்முருகன் (40) என்பவரும் மாயமானார். எனவே வேல்முருகனையும் காவல் துறையினர் தேடி வந்தனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த வேல்முருகனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேல்முருகன் மனைவிக்கும், பாண்டியனுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த வேல்முருகன் பாண்டியனை கண்டித்துள்ளார்.
இருப்பினும் பாண்டியன் திருமணத்திற்கு மீறிய உறவை கைவிடவில்லை. எனவே பாண்டியனை வேல்முருகன் தனது சொந்தமான விவசாய நிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். தனது மனைவியிடம் இனி எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாண்டியன் கேட்கவில்லை.