கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு, காலை விவசாய வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் இவரது வீட்டின் மேற்புறத்திலிருந்த மின் கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு, குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து - ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது.
தீ மளமளவென பரவியதால், அருகிலிருந்த அலமேலு என்பவரது வீடும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்து பற்றி தகவலறிந்த கிராம மக்கள், உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள், எரிந்து கொண்டிருந்த இரண்டு வீடுகளின் மீதும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.