தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய் - அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகள்

ஈரோடு அருகே தாயின் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில் 18 வயது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By

Published : May 21, 2022, 5:03 PM IST

திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய்
திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய்

ஈரோடு: அந்தியூர் அருகே நஞ்சமடைகுட்டையைச் சேர்ந்தவர் தவசி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு காவியா (20), சத்யா (18) என்ற இரு மகள்கள் உள்ளனர். காவியா திருமணமாகி தனது கணவரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் வளர்மதிக்கும் அந்தியூர் அருகே உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவிலை சேர்ந்த குருசாமி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தவசி வளர்மதியை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட விவகாரத்தில் வளர்மதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தொடர்ந்து தாய் வீட்டில் இருந்த வளர்மதி குருசாமி உடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே குருசாமியின் மனைவி ராசாத்தி தனது கணவர் பிரிந்து சென்றதற்கு காரணம் வளர்மதிதான் எனக்கூறி, அவரது தாய், மகள் என தனது குடும்பத்தாரோடு வளர்மதியின் கணவர் தவசி வீட்டிற்கு சென்று தவசியையும் அவரது மகள் சத்யாவையும் தகாத வார்த்தைகள் பேசி சண்டையிட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சத்யா (18) வீட்டினுள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் தூக்கிட்டு கொண்டதை அறிந்த அவரது தந்தை தவசி உடனடியாக கதவை உடைத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மகளை தற்கொலைக்கு தூண்டியதாக ராசாத்தி மற்றும் அவரது குடும்பத்தார் மீது தவசி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ராசாத்தி, அவரது தாய் கண்ணம்மாள், மகள் ரவீனா, ஷர்மிளா உள்ளிட்ட 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக அந்தியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தால் மட்டும் போதாது கைது செய்ய வேண்டும் என இறந்த சத்தியாவின் உறவினர்கள் திடீரென அந்தியூர் அரசு மருத்துவமனை முன்பு கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி, கைது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இளம்பண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக குருசாமியின் மனைவி ராசாத்தியை கைது செய்த அந்தியூர் காவல் துறையினர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ராசாத்தி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ராசாத்தி மட்டும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளியிடம் நகைகளை பறித்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details