தமிழ்நாடு

tamil nadu

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

By

Published : Jun 21, 2021, 1:48 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், கரோனா விதிகளை பின்பற்றி இன்று முதல் (ஜூன் 21) வருகின்ற 26ஆம் தேதி வரையிலான ஆறு நாள்கள், முன் பருவ மழைக்காலத்திற்கான வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு
வனவிலங்குகள் கணக்கெடுப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்தில் இன்றுமுதல் (ஜூன் 21) வருகின்ற 26ஆம் தேதி வரை, மொத்தம் ஆறு நாள்கள் முன் பருவ மழைக்காலத்திற்கான வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடமபூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி என 10 வனச்சரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் மூன்று நாள்கள் பகுதி வாரி கணக்கெடுப்பும், மூன்று நாள்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் நடைபெறும்.

வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வனத் துறையினர், கரோனா பரிசோதனை செய்து 'நெகடிவ்' சான்றிதழ் சமர்ப்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

அதன்படி பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதிகளில் முன் பருவ மழைக்காலத்திற்கான வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி இன்று (ஜூன் 21) காலை தொடங்கியது. இதில் வனவர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் என ஐந்து பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

யானைகள், புலிகள், பெரிய தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகளின் கணக்கெடுப்பானது, அவற்றின் எச்சம், கீறல், கால்தடங்கள், வனவிலங்குகளை நேரடியாக பார்த்தல் போன்றவை மூலம் கணக்கிடப்படும். இதற்கென அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப், வியூ பைன்டர், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.

இதில் யானையின் கால்தடம், புலியின் எச்சம், சிறுத்தை நடமாட்டம், கழுதைப்புலியின் கால்தடம் ஆகியவை பதிவுசெய்யப்பட்டன. அந்தந்த வனச்சரகங்களில் வன விலங்குகள் கண்காணிக்கும் பணிகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கம்பு பயிரில் கூட்டமாக குவிந்த குருவிகள்!

ABOUT THE AUTHOR

...view details