ஈரோடு: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அன்சர். இவர் கடந்த 14 ஆம் தேதி பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஜவுளி வாங்குவதற்காக காரில் தனது நண்பருடன் ஈரோடு நோக்கி வந்ததாகவும் பெருந்துறை அருகே ஏரி கருப்பராயன் கோயிலில் போலீஸ் போல் நடித்து நான்கு பேர் தன்னிடம் இருந்த ரூ.29 லட்சம் பணத்தை பறித்து சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் அன்சர் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை சோதனையிட்டனர். அப்போது அன்சர் பொய்யான புகார் அளித்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கேரளாவை சேர்ந்த அஷ்ரப் என்பவர் அன்சருக்கு கள்ள நோட்டுகளை வழங்குவதாக கூறி பெருந்துறைக்கு வரவழைத்தார். அங்கு மூன்று கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதாக வீடியோ ஒன்றை காட்டினார். அஷ்ரப்பின் ஆட்கள் 4 பேர் போலீஸ் போல் நடித்து அன்சரிடம் இருந்த ரூ.29 லட்சம் பணத்தை பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கோவையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை பிடித்தனர்.