சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் இன்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரப்பதம் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இந்நிலையில் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இரண்டும் வளைவில் திரும்பியபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பினர். அதே போல் மைசூரில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று ஆசனூர் அருகே வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சக்கரம் புதைந்து நகர முடியாமல் நின்றது.
மேலும், மைசூர் நோக்கி சென்ற கார் திம்பம் அடுத்துள்ள செம்மண் மேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் கவிழ்ந்தது.
ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் விபத்து - காயமின்றி தப்பித்த பயணிகள் இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையோரம் கவிழ்ந்த கார், லாரி மீட்கப்பட்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மழை காரணமாக ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் விபத்து ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.