தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 13, 2020, 6:59 PM IST

ETV Bharat / state

ஓட்டுநர் தூங்கியதால் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதல்!

ஈரோடு: சிலிண்டரை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் தூங்கியதால் லாரி மின்கம்பத்தில் மோதியது.

விபத்துக்குள்ளான லாரி
விபத்துக்குள்ளான லாரி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்திலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து இன்று அதிகாலை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கான 200க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை லாரியொன்றில் ஏற்றிக் கொண்டு, லாரி ஓட்டுநர் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஓட்டுநர் தனது தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் திணறியபடி ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். லாரி ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள நியூ டீச்சர்ஸ் காலனி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநர் கண்ணயர்ந்து போக, அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது ஏறியது.

மின்கம்பத்தில் மோதிய லாரி
பின்னர், அப்பகுதியில் இருந்த மின்சாரக் கம்பத்தின் மீது மோதி, இரண்டு கம்பங்களை உடைத்து விட்டு அங்கிருந்த சுவற்றினைத் தாண்டி செல்ல முடியாமல் நின்றது. இந்த விபத்தில் ஆட்டோக்களில் தூங்கி கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சப்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டதாலும், சுவற்றின் மீது மோதி நின்றதாலும் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் நல்வாய்ப்பாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். என்ற போதிலும் மின்சாரக் கம்பிகளால், ஏதேனும் விபத்து ஏற்பட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்காமல் இருப்பதற்காக, அப்பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், லாரியில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சூரம்பட்டி காவல் துறையினர் தூங்கி வந்து பெரும் விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரதான சாலைப்பகுதியில் ஏற்பட்ட லாரி விபத்தினால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details