தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2019, 12:25 PM IST

ETV Bharat / state

குடிசை எரிந்து தாய், மகள் உயிரிழப்பு: சொத்துக்காக உறவினர்களே தீ வைத்தது அம்பலம்

ஈரோடு: குடிசை தீப்பற்றி எரிந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சொத்துக்காக உறவினர்களே தீ வைத்தது அம்பலமாகியுள்ளது.

குடிசைக்கு தீ

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள்(40). இவரது கணவர் நாகண்ணா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இதனால், ராஜம்மாள் தனது மகன் மாதேவபிரசாத்(20) மகள் கீதா(18) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 10 நாட்களுக்கு முன் தனக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலத்தில் குடிசை அமைத்து குடியேறியுள்ளார்.

இந்நிலையில், ராஜம்மாளின் மகன் மாதேவபிரசாத் மூன்று நாட்களுக்கு முன்பு வேலைக்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். அதன்பின் கடந்த புதன்கிழமையன்று ராஜம்மாள் மற்றும் மகள் கீதா ஆகியோர் குடிசையில் இருந்தபோது, திடீரென குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில், ராஜம்மாள், மகள் கீதா இருவரும் தீயில் கருகி பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற தாளவாடி போலீசார், இறந்தவர்களின் உடல்களை ஆய்வு செய்ய சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் என்பவரை வரவழைத்து இருவரது உடல்களும் அங்கேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சொத்து பிரச்னை காரணமாக குடிசைக்கு தீ வைத்து அவர்களை கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ராஜம்மாளின் தந்தை சிக்குமாதேகவுடா, தாயார் சிவமல்லம்மா, சகோதரர் பிரேஸ், மாமியார் தொட்டமாதம்மா மற்றும் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த ராஜம்மாள், கீதாவுக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலத்தை அபகரிக்க குடிசைக்கு தீ வைத்து கொல்லப்பட்டதாக வாக்கு மூலத்தில் உறவினர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details