ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் சீதா லட்சுமி, பவானிசாகர் தொகுதி வேட்பாளர் சங்கீதாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "விடுதலைப் போரில் வென்ற தீரனுக்குப் பேரன் எங்கள் பிரபாகரன். அதிக இளைஞர்களைக் கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி ஒன்றுதான்.
நான் மக்களை இணைக்க வந்தவன். இலவசம் என்பது கவர்ச்சித் திட்டம்; வளர்ச்சித் திட்டமல்ல. அரசு ஆறு லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இலவசங்களுக்கு யாரும் தங்களது கை காசு போட்டுக் கொடுப்பதில்லை.
மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கின்றனர். திமுக கட்சி அரசியல் கட்சியா குடும்ப கட்சியா? அது ஒரு பெருநிறுவன கட்சியாக உள்ளது. அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்கும் தேவையைப் பூர்த்திசெய்வதே. இலவசங்கள் குறித்து அவர்கள் பேசுவார்கள் நான் பேசமாட்டேன். நான் ஓட்டுக்கானவன் இல்லை; நாட்டுக்கானவன்.