ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியின் வளர்ப்புத்தந்தை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த சிறுமி இவர்களிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள நண்பர் மூலமாக, உறவினர் வீட்டுக்குச் சென்று, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தாய் , அவரது இரண்டாவது கணவர்,மற்றுமொரு பெண், ஆவணங்களை தயாரித்து கொடுத்த நபர் ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்துக்கொடுத்தல் எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக சென்னையில் இருந்து வந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கமலக்கண்ணன், விசுவநாதன் ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மற்றும் ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மற்றும் காவல் துறையினர் கொண்ட குழுவினர் சிறுமியிடமும் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம் , ஓசூரில் உள்ள மருத்துவமனையில் குழுவாகப் பிரிந்து விசாரணை மேற்கொண்டனர்.