ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அங்கு கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். கடந்த சில மாதங்களாக நடராஜ் என்பவருக்கு சொந்தமான லாரி ஒர்க் ஷாப்பில் ஜெகதீஸ்வரன் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி காலை ஒர்க் ஷாப் முன்புறத்தில் பிறப்புறுப்பு காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதில் ஒர்க் ஷாப் உரிமையாளர் நடராஜ், அதேப் பகுதியில் பஞ்சர் கடை வைத்திருந்த நவீன் இருவரும் தலைமறைவானதால் அவர்களை காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் இருவரும் அய்யன்சாலை பகுதியில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.