ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு முற்றிலுமாக குறைந்துள்ளதால் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்ட எல்லைப் பகுதிகள், சோதனைச்சாவடிகளில் காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் நுழையும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர்.
இரண்டு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளிடம் வாகன உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டும், எந்தக் காரணத்திற்காக வாகனம் ஈரோட்டிற்குள் செல்கிறது, வாகனங்களில் செல்பவர்களின் முகவரி ஆகியவை பதிவு செய்யபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வாகன அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனரா? வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறித்த சோதனைக்குப் பிறகே நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றது.