ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (செப். 7) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற 13 ஆசிரியர்களுக்குப் பதக்கங்களை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறுகையில், "கரோனாவைக் கட்டுப்படுத்திடும்வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் முகக்கவசம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்திலுள்ள மூன்று லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு 19 லட்சத்து 83 ஆயிரம் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.